குழந்தை உலகம்-61

வாழ்நாள் தேவைகள்


சில குடும்பங்களில் பிறந்த குழந்தைகள் மேம்பட்டு சிந்திப்பதும், சில குடும்பத்துப் பிள்ளைகள் தரம் குறைந்து சிந்திப்பதும் நாம் இயல்பாக பார்க்க முடிகிற விசயமாக இருக்கிறது.

"இந்த ஊரில் இருந்தால் அருகிலுள்ள குழந்தைகளைப் பார்த்து என் குழந்தையும் கெட்டுவிடுவான்" என்கிற பயத்தில் வேறு நகரங்களுக்கு குடிபெயர்ந்தவர்களும் ஏராளம் இயுக்கின்றனர். 

ஒரே தெருவில் வசிப்பவர்களின் குழந்தைகள் ஒரே மாதிரி சிந்திப்பதில்லை. எனவே குழந்தைகளின் சிந்தனை அருகில் வசிப்பவர்களைச் சார்ந்து அமைவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளின் சிந்தனையின் தரம் அவரவர் குடும்ப சூழலைச் சார்ந்துதான் வடிவம் பெறுகிறது.

குடும்பச் சூழல் என்பதில் நமது குடும்ப வருமானம், நமது கல்வித்தகுதி, நமது பணி, பதவி, நம்முடைய   பேச்சுமொழி , நமது இனம், மதம், குடும்பப் பாரம்பரியம், போன்றவை மிக முக்கிய இடம் பெறவில்லை.

இவை தான் குழந்தையின் சிந்தனையில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மையானால் ஏழை வீட்டில் பிறந்தவன் பணக்காரன் ஆகியிருக்க முடியாது.

கல்வியறிவு இல்லாதவர்களின் பிள்ளைகள் பெரிய படிப்புகளில் வெற்றி பெற்றிருக்க முடியாது.

இவற்றை எல்லாம் தவிர்த்த ஒரு விசயத்தில் நாம் மிக முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

அது பற்றி பார்ப்போம்.

மனிதர்கள்  தங்கள் தேவையின் அடிப்படையில்தான்  இயங்குகிறார்கள்.

நம் தேவையுடன், நம் குழந்தைகளின் தேவையையும் நிறைவேற்றும் நோக்கத்தில்தான் நாமும் செயல்படுகிறோம்.

அதே போன்று நம் குழந்தைகள் செயல்படவும் சில தேவைகள் இருக்க வேண்டும்.

அத்தகைய தேவைகள் என்னென்ன என்பதை சுட்டிக்காட்டுவதும் நம் கடமைதான்.

உணவு, உடை , இருப்பிடம் என்பவை நமது அடிப்படையான தேவைகள்.

இவற்றை பூர்த்தி செய்வதே நமது வாழ்நாள் இலக்கு என்பதாக நமது பிள்ளைகளுக்கு சுட்டிக்காட்டினால் அவர்கள் அதை நோக்கியே இயங்குவார்கள்.

ஒரு அரசு வேலை , தனியார் வேலை, மருத்துவர், பொறியாளர் , விவசாயம்,  வியாபாரம் போன்றவற்றை வாழ்நாள் தேவைகளாக குழந்தைகளிடம் சுட்டிக்காட்டினால் அவர்களும் இவற்றை நோக்கியே இயங்குவார்கள்.

நல்ல ஒழுக்கம், நல்ல அறிவு, உயர்ந்த சிந்தனை, கலை, இலக்கியம், அறிவியல், ஆன்மீகம், புதிய கண்டுபிடிப்புகள், சிறந்த படைப்புகள்  என்பன போன்றவற்றை நமது வாழ்நாள் தேவைகளாகச் சுட்டிக்காட்டினால் இவற்றை நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டு நம் குழந்தைகள் இயங்குவார்கள்.

இதன் மூலம் நம் குழந்தைகளின் தனித்தன்மையும் இயல்பாகவே வெளிப்படும்.

   நம்முடைய தனிப்பட்ட வாழ்நாள் லட்சியம் என்பதற்கும், நம் வாழ்நாள் தேவைகள் என்பதற்கும் சிறு வித்தியாசம் இருக்கிறது.

லட்சியம் என்பது நாம் நிர்ணயிப்பது, தேவை என்பது நம்முடைய புறச்சூழல் நிர்ணயிப்பது.

என்னதான் குழந்தைக்கென்று தனிப்பட்ட விருப்பு, லட்சியம், ஆசை இருந்தாலும், அதை குழந்தை , அவர்களாகவே கண்டறிய வேண்டும்.

அது வரையிலும் பெற்றோராகிய நம்மைச் சார்ந்துதான் சிந்திப்பார்கள், செயல்படுவார்கள்.

எனவே நாம் அவர்களுக்கு சுட்டிக்காட்டும் வாழ்நாள் தேவைகள் அற்பமானதாக, இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

சாதாரன, எளிய தேவைகளை அவர்களிடம் சுட்டிக்காட்டி அவர்களது ஆற்றலை வீணாக்காதீர்கள். 

மாறாக,

நம் குழந்தைக்கு நாம் சுட்டிக்காட்டும் வாழ்நாள் தேவைகள் உன்னதமானதாகவும், உயர்ந்ததாகவும், இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக 

சாப்பாடக் கூட வசதியில்லாத குடும்பத்தில்  "மூன்று வேலை சாப்பாட்டிற்காக சம்பாதிப்பதே நம்முடைய  அடிப்படைத் தேவை" என்று சுட்டிக் காட்டுவதற்குப் பதிலாக "எதிர்காலத்தில் வறியவர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் வகையில் நாம் முன்னேற வேண்டியதுதான் நம்முடைய அடிப்படைத் தேவை" என்பது போன்று  நாம் சுட்டிக்காட்டலாம்.

அரு.மாரிகணேசு,
ஆசிரியர்,
தென்திருப்பேரை,
9943422906
arumariganeshu@gmail.com

Comments

Popular posts from this blog

குழந்தை உலகம்-53